நாகையில் தவறான சிகிச்சை அளித்ததால் 11-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே குறிச்சியை சேர்ந்த வீரமணி என்பவரது மகன் சந்தோஷ். நாகையில் உள்ள தேசிய மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் வயிற்று வலி காரணமாக நாகையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அப்போது சந்தோஷ் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார்.
இதையடுத்து மாணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர், உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். தொடர்ந்து ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் வேம்பரசி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து மகனின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதுகுறித்து வீரமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கூறும்போது,
மாணவன் சந்தோஷுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பே விஷப்பூச்சி கடித்து இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. பூச்சியின் விஷம் இதயத்தின் சதைப் பகுதி வரை பரவியுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் மாணவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பூச்சியின் விஷம் இதயத்தின் சதைப் பகுதியில் பரவியதால் அது செயலிழந்து விட்டது. இதனால் மாணவர் சந்தோசை காப்பாற்ற முடியவில்லை. உரிய நேரத்தில் சிகிச்சையில் சேர்த்து இருந்தால் மாணவரை காப்பாற்றி இருக்கலாம்.
இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷப்பூச்சி கடித்த உடனேயே 3 பேர் சிகிச்சைக்காக வந்தனர். உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு வந்ததால் 3 பேரையும் காப்பாற்ற முடிந்தது என்றனர்.
தவறான சிகிச்சை அளித்ததால் 11-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் மு.அன்பழகன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களை பாராட்டி ரொக்கம் வழங்கினார.