திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் 33-வது நிறுவன நாள் மற்றும் உழவர் தின விழா...
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் 33-வது நிறுவன நாள் மற்றும் உழவர் தின விழா, ஆகஸ்ட் 21, 2026, வெள்ளிக்கிழமை அன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. நடப்பாண்டில், நீடித்த கோடை காலம், வறட்சி, குறைந்த மழை பொழிவு, வெப்ப சலனம், வழக்கத்திற்கு மாறான அதி வேக காற்று போன்ற காலநிலை மாறுபாட்டின் மொத்த உருவமான “சூப்பர் எல் நினோ” நம்முடைய விவசாயிகளுக்கு ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது. இதனை எவ்வாறு சமாளிப்பது என்பதை விவாதிக்கும் பொருட்டு, “சூப்பர் எல் நினோ – நெல், வாழை மற்றும் தென்னை விவசாயத்தில் ஏற்படும் சவால்களும் அவற்றை சமாளிக்கும் உத்திகளும்” என்னும் தலைப்பின் கீழ் இந்த விழா நடத்தப்படவுள்ளது. இவ்விழாவினை காசரகோடு (கேரளம்) ICAR-மத்திய தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கே. பாலச்சந்திர ஹெப்பார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து உரையாற்ற இசைந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:
• விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் கருத்துக் களஞ்சியம்: விவசாயத்தில் அனுபவம் கொண்ட வல்லுநர்கள் பங்கேற்கும் தொழில்நுட்பக் கருத்தரங்கு. இந்த நிகழ்வில் வாழை மற்றுமல்லாது தென்னை மற்றும் நெல் பயிருக்கான மேம்பாடு மற்றும் சூப்பர் எல் நினோவை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விஞ்ஞானிகள் விரிவாக விளக்கம் அளிப்பார்கள்.
1) சூப்பர் எல் நினோ-வினால் விவசாயத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வது எப்படி?
2) சூறையாடும் வாடல் நோய் : வாழைச் சாகுபடியில் வாடல் நோய் மேலாண்மை.
• வாழை வகைகள் மற்றும் கருத்து கண்காட்சி: வாழைச் சாகுபடிக்குத் தேவையான இடுபொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்கும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் சகலவிதமான வாழை இரகங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
• விருதுகள்: வாழை உற்பத்தியில் சாதனை புரிந்த விவசாயிகள், தொழில்முனைவோர், உணவு உற்பத்தியாளர் குழுக்கள், வேளாண் சமூக ஊடகங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலையங்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
• ஆராய்ச்சிப் பண்ணையை பார்வையிடுதல்: தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் பண்ணையைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் உண்டு. மேலும், எங்களது பண்ணையின் சிறப்பம்சமான செயற்கை நுண்ணறிவு சார் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் நீர் மற்றும் நீர்வழி உரமிடுதல் முறையை பார்வையிடும் வாய்ப்பும் உள்ளது.
• கட்டணமில்லா அனுமதி: இந்த விழாவிற்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை.
• போக்குவரத்து: திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம் மற்றும் பஞ்சபூர் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து விழா நடைபெறும் இடத்திற்கு காலை 8.00 மணிக்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அரிய வாய்ப்பினை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொண்டு, விவசாயத்தில் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் என்று இயக்குநர்முனைவர் இரா. செல்வராஜன் தெரிவித்துள்ளார்.