நாகையில் நடந்த மாநில அளவிலான பெண்களுக்கான சிலம்பப் போட்டியில் திருவள்ளூர், புதுக்கோட்டை அணியினர் சாம்பியன்
நாகை அருகே கருவேலங்கடையில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் சார்பில் மாநில அளவிலான 41-வது சிலம்ப போட்டி நடைபெற்றது. போட்டிக்கு தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக மாவட்ட தலைவர் ஆல்பட் ஜான் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் விஜய்பாபு, மாநில பொருளாளர் ரவிச்சந்திரன், முதன்மைப் போட்டி இயக்குனர் நெல்லை சுந்தர், மற்றும் முதன்மை தொழில்நுட்ப இயக்குனர் அழகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிகளை தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் தலைவர் பிரதீப் ராஜே தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் திருச்சி, தஞ்சை, கரூர், மதுரை, நாமக்கல் உள்ளிட்ட 38 மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 14 வயது முதல் 18 வயது வரை ஜீனியர் பிரிவு, 25 வயதிற்கு மேல் பொதுபிரிவினருக்கான போட்டி ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நடத்தப்பட்டது. முதற்கட்டமாக பெண்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு பிரிவுகளில் சிலம்பம் சுற்றி தங்களது திறனை வெளிப்படுத்தி அசத்தினர். அதன்படி பெண்களுக்கான ஜூனியர் பிரிவில் 10 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்கள் வென்று திருவள்ளூர் அணியினர் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர். அதேபோல பெண்களுக்கான பொது பிரிவில் 4 தங்கம், 3 வெள்ளி என மொத்தம் 7 பதக்கங்கள் வென்று புதுக்கோட்டை அணியினர் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர். இவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டது. முதல் இரண்டு இடங்களை பெரும் வீரர், வீராங்கனைகள் வரும் ஜனவரி மாதம் புதுச்சேரியில் நடக்கும் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்க உள்ளனர். தமிழர் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தை இளம் தலைமுறையிடையே பரப்பும் வகையிலும், மாநில அளவில் திறமையான வீரர்–வீராங்கனைகளை உருவாக்கும் வகையிலும் இந்த போட்டிகள் அமைந்து உள்ளதாக வெற்றி பெற்ற வீராங்கனைகள் தெரிவித்தனர்.